இலங்கை

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

நாட்டில் எழுந்துள்ள கொரோனா தொற்று அச்சநிலையைக் கருத்திற்கொண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள பொறியியல் பீடம், விவசாய பீடம், தொழில்நுட்பப் பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை அவர்களின் வீடுகளுக்குச் செல்ல அனுமதிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கிளிநொச்சி வளாக பீடாதிபதிகளின் அவசரக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

எனினும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களையும் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மாணவர்களையும் அவர்களின் பரீட்சைகள் முடியும் வரை விடுதிகளில் தங்கியிருப்பதற்கு அனுமதிப்பதென இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள பொறியியல் பீடம், விவசாய பீடம், தொழில்நுட்பப் பீடங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்து 500 மாணவர்கள் விடுதிகளில் தங்கி கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் சுகாதாரத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே விடுதிகளில் தங்கிக் கல்விச் செயற்பாடுகளைத் தொடர்வதற்கு அனுமதிக்கப்பட்டதுடன் கிரமமாக எழுமாற்று பி.சி.ஆர். பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதுவரை, குறித்த மாணவர்களில் ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என்றாலும், வடக்கு மாகாணத்திலும் நாடெங்கிலும் எழுந்துள்ள நிலைமைகளை அடுத்து மாணவர்களை வீடுகளுக்கு அனுப்புவதற்குப் பீடாதிபதிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பரீட்சைகளுக்குத் தோற்றும் தொழில்நுட்பப் பீடத்தைச் சேர்ந்த இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்கள் 205 பேரும், பொறியியல் பீடத்தின் இறுதியாண்டு மாணவர்கள் 125 பேரும், விவசாய பீடத்தைச் சேர்ந்த 140 பேருமாக 470 மாணவர்கள் மட்டும் அவர்களின் சுய விருப்பின் பேரில் விடுதிகளில் தங்கி பரீட்சைகளில் தோற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக விடுதி அறை ஒன்றுக்கு ஒரு மாணவன் என்ற நடைமுறையும் பின்பற்றப்படுவதாக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker