இலங்கை

வடக்கின் பிரதம செயலாளராகச் சிங்களவர் ஒருவரை நியமித்தமை பேரினவாத ஒடுக்குமுறையின் இன்னுமொரு வடிவம் – ஐங்கரநேசன்

தமிழ் மாகாணமான வடக்கில் பிரதம செயலாளராகச் சிங்களவர் ஒருவரை நியமித்துள்ளமை இலங்கை அரசாங்கத்தின் பேரினவாத ஒடுக்குமுறையின் இன்னுமொரு வடிவமாகும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கின் பிரதம செயலாளராக வவுனியா மாவட்டச் செயலர் எஸ்.எம். சமன் பந்துலசேனவுக்கு ஜனாதிபதியால் நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொ.ஐங்கரநேசன் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “இலங்கை ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் சிங்களப் பேரினவாதத்தால் தமிழ் மக்கள் இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் தொடர் ஒடுக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டதன் காரணமாகவே தமிழ் மக்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தத் தலைப்பட்டனர்.

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் வலுப்பெற்றதன் விளைவாகவே இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாகாண சபை முறைமை தோற்றம் பெற்றது. தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்ட மாகாணசபைக்குப் பிரதம செயலாளராகச் சிங்கள இனத்தவர் ஒருவரை நியமித்திருப்பது மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணங்களையே நிராகரிக்கும் ஓர் இனவாதச் செயற்பாடாகும்.

மாகாண சபைகளுக்கான 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் பிரதம செயலாளரை நியமிப்பது ஜனாதிபதிதான் எனினும் அந்நியமனம் மாகாண முதல்வரின் உடன்பாட்டுடனேயே செய்யப்படல் வேண்டும்.

வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் 2018ஆம் ஆண்டு முடிவடைந்த உடனேயே மாகாணசபைத் தேர்தலை நடாத்தியிருக்கவேண்டிய அரசாங்கம் பல்வேறு காரணங்களைக் காட்டிக் கபடநோக்கங்களுடன் தேர்தலைப் பிற்போட்டு வருகின்றது. தேர்தலுக்கு முன்பாக மாகாணசபைக்கூடாக தமிழ் மக்களுக்குக் கிடைத்திருக்கக்கூடிய மிகக் குறைந்தபட்ச அதிகாரங்களையும் பிடுங்கிவிட வேண்டும் என்பதில் குறியாகச் செயற்பட்டு வருகின்றது.

இலங்கைத் தீவில் தனித்துவமான மொழி, பண்பாடு, பாரம்பரிய வாழிடம், ஆள்புலம் என்பனவற்றைக் கொண்டதன் அடிப்படையில் தமிழ் மக்கள் தனியானதொரு தேசம் ஆகும். ஆனால், இதனை நிராகரித்து ‘ஒரே நாடு ஒரே தேசம்’ என்று முழக்கமிட்டு வரும் பேரினவாதம் தற்போது ‘ஒரே நாடு ஒரே நிர்வாகம்’ என்று ஒடுக்குமுறையின் அடுத்த கட்டத்துக்குள் பிரவேசித்திருக்கின்றது.

இலங்கை அரசாங்கத்தின் சூழ்ச்சிகரமான இத்தகைய திட்டங்களைப் புரிந்துகொண்டு அதற்கான சரியான எதிர்வினைகளை ஆற்றுவதற்குக் கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுறுதி கொண்ட அனைவரும் ஓரணியில் திரளவேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker