‘ஒன்றாகுவோம் ஒரு குடையின் கீழ்’ எனும் கருப்பொருளில் அம்பாரை மாவட்ட தமிழ் மக்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவருகின்ற முயற்சி…

வி.சுகிர்தகுமார்
‘ஒன்றாகுவோம் ஒரு குடையின் கீழ்’ எனும் கருப்பொருளில் அன்புக்கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் அம்பாரை மாவட்ட தமிழ் மக்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவருகின்ற முயற்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆலோசனை கூட்டம் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9மணியளவில் ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இடம்பெறவுள்ள குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள புத்திஜீவிகள், அரச அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், யுவதிகள், ஆலயம் உள்ளிட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், விளையாட்டுக்கழகங்கள், பொதுமக்கள் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புக்கரங்கள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
95000 இற்கும் மேற்பட்ட வாக்குகளை வைத்திருந்த போதிலும் தமிழர்கள் பிரிந்து நின்று செயற்பட்டதன் விளைவினை கடந்த பொதுத்தேர்தலின் முடிவுகள் எமக்கு கற்றுக்கொடுத்துள்ளது.
இந்நிலையில் எதிர்வருகின்ற தேர்தலிலும் இதுபோன்று பிரிந்து செயற்படுவதனால் இன்னும் பல இழப்புக்களை தமிழ் மக்கள் சந்திக்க நேரிடும் என்பது அறிந்ததே.
மேலும் நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலிலும் இன்னும் பல கட்சிகள் அம்பாரை மாவட்ட தமிழ் மக்களிடையே களமிறக்கப்படுவதற்கான காய் நகர்த்தல்களும் இப்போதே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆகவே எத்தனை கட்சிகள் களத்தில் குதித்தாலும் அம்பாரை மாவட்ட தமிழ் ஒன்றுபடாத சந்தர்ப்பத்தில் வெற்றி வாய்ப்பென்பது எட்டாக்கனியாகவே இருக்கும் என்பது யதார்த்தமே.
இந்நிலையிலே அன்புக்கரங்கள் அமைப்பு அம்பாரை தமிழ் மக்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது.
இதன் பிரகாரம் அனைத்து அரசியல் கட்சிகளையும் பொதுச்சின்னம் ஒன்றின் கீழ் அணி திரட்டி அதற்குள் அவர்கள் விரும்புகின்ற வேட்பாளர்களை நிறுத்தி ஒட்டுமொத்தமான வாக்கினையும் தெரிவு செய்யப்படும் பொதுச்சின்னத்திற்கு அளிப்பதன் மூலம் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கவுள்ளது.
அத்தோடு வாக்களிக்கும் வீதத்தினை மக்களிடம் அதிகரிக்க செய்யும் விழிப்பூட்டலையும் மேற்கொள்ளவுள்ளது.
ஆகவே இது தொடர்பில் ஆராயும் இக்கூட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு ஆக்க பூர்வமான கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.