இலங்கை

பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான சகல வர்த்தக நிலையங்களுக்கு நேரக் கட்டுப்பாடு!

பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான சகல கடைகளும் இரவு 7 மணிக்கு முன் மூடப்பட வேண்டும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா 3 ஆவது அலையின் தாக்கம் நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”கொரோனா நிலைமை தொடர்பில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எமது கல்முனை பிராந்தியத்திற்கு உள்பட்ட பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான சகல வர்த்தக நிலையங்களுக்கு நேர கட்டுப்பாடு விதித்துள்ளோம்.அதாவது இரவு 7 மணியுடன் பூட்டப்பட வேண்டும் என்பதாகும்.

கல்முனை பிராந்திய கோவிட் 19 நிலைமைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று நடைபெற்றது.இதன்போது பிராந்தியத்தில் நடைபெற்று வரும் கொரோணா கட்டுப்பாட்டு நிலைகள் தொடர்பிலும்இ சுகாதார விதிமுறைகளை மீறி சாய்ந்தமருதில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்று தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளதுடன்.

இன்று மாலை முதல் கல்முனை பிராந்தியத்தில் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு 07.00 முதல் வர்த்தக நிலையங்கள் மூடப்பட வேண்டும் எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இரவு நேரத்தில் பள்ளிவாசல்களில் சுகாதார வழிமுறைகளை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பார்வையிட வேண்டும். அப்போது அங்கு சுகாதார வழிமுறைகள் மீறப்பட்டிருந்தால் பள்ளிவாசல் உடனடியாக மூடப்பட வேண்டும் என்பதுடன் பொதுமக்கள் கடற்கரை, மற்றும் பொழுதுபோக்கு பார்க் என்பன மூடப்படும்.

வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர் அந்த பிரிவின் கிராம நிலதாரியிடம் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஆன்டிஜன் பரிசோதனைகள் தொடரும் என்பதுடன் வறியோர்களுக்கு உதவுவோர் தமது ஊருக்குள் உள்ளவர்களுக்கு தமது உதவிகளை மட்டுப்படுத்தி கொள்ள வேண்டும். என்ற தீர்மானங்களை ஏகமனதாக நிறைவேற்றினர்.

இன்று சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத தனியார் கம்பெனி ஒன்று மூடப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் ஆபத்தான கொரோனா வைரஸ்கள் பரவி வருகின்றன. நாவிதன்வெளி சுகாதார பிரிவின் வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவர் தடுப்பூசி பெற்றிருந்தும் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.

அவர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். ஆகவே பொதுமக்களின் சுகாதாரம் தொடர்பில் இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கும் கல்முனை மாநகர சபைக்குமிடையிலான உணவு பாதுகாப்பு மற்றும் பொது சுகாதார சேவை பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தானது.

இதில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை சார்பில் நானும் கல்முனை மாநகர சபை சார்பில் கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கீப்பும் கையெழுத்திட்டோம்” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker