ஐ.பி.எல் 2020 : 20 கோடியில் இருந்து 10 கோடியான முதல் பரிசு

ஐ.பி.எல் போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கான பரிசுத்தொகையை அரைவாசியாகக் குறைத்துள்ளதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (பி.சி.சி.ஐ.) தெரிவித்துள்ளது.
13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா வரும் 29 ஆம் திகதி தொடங்குகிறது. வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸூடன் மோதுகிறது.
ஐ.பி.எல். போட்டிகளின் இறுதி ஆட்டம் மே மாதம் 24 ஆம் திகதி நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் சம்பியன் பட்டம் பெற்ற அணிக்கு 20 கோடி ரூபாயும், இரண்டாவது இடம் பிடித்த அணிக்கு 12.5 கோடி ரூபாயும், 3 ஆவது மற்றும் 4 ஆவது இடம் பிடித்த அணிகளுக்கு தலா 8.75 கோடி ரூபாயும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். பரிசுத்தொகையில் பி.சி.சி.ஐ. அதிரடி மாற்றம் கொண்டுவந்துள்ளது. அதன்படி சம்பியன் பட்டம் பெறும் அணி உட்பட தரவரிசையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
பி.சி.சி.ஐ அறிவித்துள்ள புதிய பரிசுத்தொகை விவரத்தின் படி 2020 ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் சம்பியன் பட்டம் பெறும் அணிக்கு 10 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும். இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு 6.25 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
அதேபோல் 3 ஆவது மற்றும் 4 ஆவது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா 4.375 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும், ஐ.பி.எல். போட்டிகளை நடத்தும் ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளதாக பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.