நிதி குழு ஆலோசனையை பெற்றுக் கொள்ளவில்லை: அதனாலே எதிர்த்து வாக்களித்தோம் ஆலையடிவேம்பு பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் விளக்கம்

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 05 ஆவது கூட்ட அமர்வு இன்று (10) பிரதேச சபையின் தவிசாளர் ஆர்.தர்மதாச தலைமையில் இடம்பெற்றது இதன்போது 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் (பட்ஜெட்) சமர்ப்பிக்கப்பட்டு 02 மேலதிக வாக்குகளால் மாத்திரம் நிறைவேற்றப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த 07 உறுப்பினர்களும் குறித்த வரவு செலவுத்திட்டத்தை எதிர்த்து வாக்களித்திருந்தனர்.
எதிர்த்து ஏன் வாக்களித்தோம் என்பது தொடர்பாக ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ரதீசன் அவர்கள் பல காரணங்களையும் விடயங்களையும் தெரிவித்திருந்தார்,
கௌரவ உறுப்பினர் தெரிவித்த விடயங்கள்,
பிரதேச சபைகளில் வரவு செலவுத்திட்டம் தயாரிக்கும் போது நிதி குழுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்கள் ஆலோசனைகள் பெறப்பட்ட பின்னரே வரவு செலவுத்திட்டம் தயாரித்து இருக்க வேண்டும்.
இவ்வாறு இருக்க இன்று பிரதேச சபை தவிசாளரால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் தயாரிக்கும் போது நிதி குழுவிற்கு அழைப்பு விடுக்கப்படவும் இல்லை ஆலோசனையை பெற்றுக்கொள்ளவே இல்லை. இது இவர்கள் விட்ட முதல் தவறாக நாங்கள் பார்த்திருந்தோம்.
ஆரம்பமே ”முதல் கோணல் முற்றும் கோணல்” என்பதுபோல் தவிசாளரால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் அமைந்தது.
மேலும் கடந்த கால வருமானம் ஈட்டக்கூடிய வழிகளில் உதாரணமாக கலாச்சார மண்டபத்தின் ஊடக இந்த வருடம் கிடைக்கப்பெற்ற வருமானமாக அண்ணளவாக மூன்று லட்சம் தொடக்கம் 4 லட்சம் வரையான வருமானமே ஈட்டப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு இருக்க எதிர்வரும் வருடத்தில் இருபத்தி ஐந்து லட்சம் வருமானமாக ஈட்டக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக வரவு செலவு திட்டத்தில் காட்டப்பட்டிருக்கிறது. இது உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு மிகைப்படுத்தப்பட்ட வருமானமாகவே நாங்கள் கருதுகின்றோம்.
மூன்று லட்சத்திற்கும் இருபத்தி ஐந்து லட்சத்திற்கும் பாரிய வித்தியாசம் இருக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம் அதே போன்று சோலை வரியாக இருபத்தி ஐந்து லட்சம் எதிர்வரும் வருடத்தில் திரட்டலாம் என எதிர்பார்ப்பதாக காட்டப்பட்டிருக்கிறது.
ஆனால் கடந்தவருடம் சோலை வரி அறவிடுவதற்கான எந்த வித சட்டரீதியான முன் ஏற்பாடுகளும் இதுவரை செய்யப்படவில்லை அதற்கான எல்லைகள் தீர்மானிக்கப்படவில்லை இது போன்ற தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்படவில்லை அதன் மூலம் இருபத்தி ஐந்து லட்சம் வருமானம் வரும் என கட்டப்பட்டிருக்கிறது இதுவும் ஒரு மிகைப்படுத்தப்பட்ட வருமானமாக பார்க்கிறோம் மேலும் எவ்வாறு பல விடயங்களை கூறிக்கொண்டு செல்லலாம்.
அந்த வகையில் பெறப்படும் வருமானத்திற்கும் மொத்த செலவினத்துக்குமான வித்தியாசமாக அண்ணளவாகஇரண்டாயிரம் ரூபாய் ஆக காட்டப்பட்டு இருக்கிறது.
முன்பு சொன்னது போன்று மிகைப்படுத்தப்பட்டு காட்டப்பட்ட வருமானங்கள் எதிர்வரும் வருடம் கிடைக்க போவது இல்லை. இவ்வாறு இருக்கையில் இவர்கள் சமர்பித்திருக்கும் வரவு செலவுத்திட்டத்தில் வருமானத்தை மிகைப்படுத்தி காட்டி இருப்பதாக நாங்கள் கருதுகின்றோம்.
அதே நேரத்தில் நிறைய வருமான மூலங்களை செயட்படுத்தாமல் அவ்வாரே வைத்திருக்கிறார்கள். இது வருமான இழப்பாக அமைகிறது.
உதாரணமாக வயலுகளுக்கான சோலை வரி அறவீடு ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கு உட்பட்ட நிறைய வயல் நிலங்கள் இருக்கின்றன ஒரு ஏக்கருக்கு வருடாந்த வருமானமாக 1,000 ரூபாய் அறவிடக்கூடியதாக இருந்தும் இது அறவிடப்படாமல் இருக்கிறது.
இவ்வாறு அதிக வருமான மூலங்களை செயல்படுத்த வேண்டிய தேவை இருந்தும் இவர்கள் செயல்படுத்தாமல் இவ்வாறான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக நிதி குழு ஆலோசனை பின்பற்றப்படாமல் நிதி குழுவிற்கு அழைப்பு விடுக்கப்படாமல் இந்த வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது அந்த வகையில் இந்த வரவு செலவு திட்டத்திற்கு எதிர்த்து வாக்களித்திருந்தோம் என தெரிவித்தார்.



