ஆலய நிருவாகங்களே அந்த கிராமத்தையும் வாழும் மக்களையும் வழிநடத்தி நிருவகிக்க வேண்டும்- மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன்

வி.சுகிர்தகுமார்
ஆலய நிருவாகங்களே அந்த கிராமத்தையும் வாழும் மக்களையும் வழிநடத்தி நிருவகிக்க வேண்டும். இதுவே ஆலய நிருவாகத்தின் பொறுப்பும் முதற்கடமையும் என அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் தெரிவித்தார்.
மேலும் ஆலங்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்க விதிமுறைகள் சட்டதிட்டங்கள் தொடர்பாகவும் விரிவான விளக்கமளித்தார்.
அக்கரைப்பற்று விபுலானந்தா அபிவிருத்தி நிலைய ஒன்று கூடல் மண்டபத்தில் நேற்று (07) நடைபெற்ற இந்து சமய தலைவர்கள் மற்றும் அறநெறி ஆசிரியர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறியில் வளவாளராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்ற பயற்சி நெறியில் அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர்களான கே.ஜெயராஜ், என்.பிரதாப், ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் நிசாந்தினி தேவராஜ்
மற்றும் அறநெறி ஆசியர்கள் ,பிரதேச ஆலயங்கள், இந்து சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதேநேரம் வளவாளராக கலந்து கொண்ட மேலதிக அரசாங்க அதிபர் விளக்கமளிக்கையில்
வசதி படைத்தவர்களிடம் இருந்து நிதியை பெற்று வருமானம் குறைந்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதனையே ஒரு காலத்தில் ஆலயங்கள் மேற்கொண்டன. ஆனால் இன்று வருமானம் இல்லாத மக்களிடம் இருந்து நிதி அறவீடு செய்து ஆலயங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த நிலை மாறவேண்டும். முடிந்தவரை ஆலயங்கள் மக்களின் நலனுக்காக பாடுபட வேண்டும் என்றார்.
மேலும் ஆலயங்கள் தொடர்பான பிரச்சினைகள் அக்கிராமத்தினுள்ளேயே தீர்க்கப்படவேண்டும் எனவும் வீணே நீதிமன்றம் வரை செல்லும் நடவடிக்கை நிறுத்தப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.