ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இலங்கை இராணுவத்தில் காணப்படும் 77 வகையான பதவி வெற்றிடங்களுக்கு இன்று நேர்முகப் பரீட்சை ஆரம்பமானது!

வி.சுகிர்தகுமார்
இலங்கை இராணுவத்தில் காணப்படும் இசைக் கருவி வாசிப்பாளர், கனிஷ்ட நிர்வாக உதவியாளர், கணினி வன்பொருள் உதவியாளர், வைத்திய உதவியாளர், தாதி மருந்தகர் உள்ளிட்ட 77 வகையான பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று (25) நேர்முகப் பரீட்சை ஆரம்பமானதுடன் டிசெம்பர் 2ஆம் திகதி வரை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நேர்முகப் பரீட்சை நடைபெறவுள்ளது.
இந்த நேர்முகப் பரீட்சையில் கலந்துகொள்கின்ற இளைஞர், யுவதிகள் வெற்றிடமாகவுள்ள 77 பதவிகளில் விரும்புகின்ற பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.
இதன் அடிப்படையில் இன்று கண்ணகிபுரம்-1, 2; மற்றும் சின்னமுகத்துவாரம் பிரிவுகளிற்கும் நடைபெற்றது. 26 ஆம் திகதி கோளாவில்-01, 02, 03 மற்றும் அலிக்கம்பை ஆகிய பிரிவுகளுக்கும் 27ஆம் திகதி வாச்சிக்குடா, நாவற்காடு, பனங்காடு, சின்னப்பனங்காடு, ஆகிய பிரிவுகளுக்கும் 30ஆம் திகதி அக்கரைப்பற்று 8, 8/1, 8/3, 9 ஆகிய பிரிவுகளுக்கும் டிசம்பர் 01ஆம் திகதி அக்கரைப்பற்று 7/1, 7/2, 7/3 ஆகிய பிரிவுகளுக்கும் 02ஆம் திகதி அக்கரைப்பற்று 7, 8/2, ஆலையடிவேம்பு ஆகிய பிரிவுகளுக்கும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தகுதிகளாக, விண்ணப்பதாரிகள் இலங்கைப் பிரஜைகளாக இருத்தல், திருமணமாகாதவர்களாக இருப்பதுடன், ஆண்கள் 18-26 வயதுக்குள்ளும், பெண்கள் 18-22 வயதுக்குள்ளும் இருத்தல், ஆண்கள் குறைந்தது 5’4′ உயரமுடையவர்களாகவும், பெண்கள் குறைந்தது 5’2′ உயரமுடையவர்களாகவும் இருத்தல் வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதவிகள் யாவும் ஓய்வூதிய உரித்துடையதுடன், அரச உத்தியோகத்தர்களுக்கான சகல சலுகைகளும் வழங்கப்படும். மேலும் குறைந்த பட்ச திரட்டிய சம்பளம் 50000 ரூபாய் வழங்கப்படும்.
தகைமையுடையவர்கள் விண்ணப்ப படிவங்களையும் மேலதிக தகவல்களையும் உங்களது பிரதேச கிராம உத்தியோகத்தரிடம் அல்லது ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.