கொரோனா தொற்றுள்ளவர்களை தீண்ட தகாதவர்கள் போல் நடத்த முயலாதீர்கள்: ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் விழிப்புணர்வு செயலமர்வு….

கொரோனா தொற்றுள்ளவர்களை தீண்ட தகாதவர்கள் போல் நடத்த முயலாதீர்கள். அவ்வாறானவர்களை அடையாளம் கண்டால் அந்நோயிலிருந்து அவர்களை மீண்டெடுப்பதற்கான ஆக்க பூர்வமான நடவடிக்கையினை முன்னெடுங்கள். ஏனெனில் அவர்களும் நமது உறவுகளே என ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு கூட்டத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
கொரோனா தொடர்பில் உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் விழிப்புணர்வு செயலமர்வு அரச அலுவலகங்களில் இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நேற்று(18) இடம்பெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வைத்திய அதிகாரி அகிலன் உதவிப்பிரதேச செயலாளர் சுவாகர் மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இராணுவ உயர் அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கொரோனா நோய் தொடர்பான விரிவான விளக்கங்களும் அதில் நம்மை பாதுகாத்துக்கொள்வதன் வழிமுறைகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பிலும் பிரதேச செயலாளர் மற்றும் வைத்திய அதிகாரியினால் சுட்டிக்காட்டப்பட்டது.
இதேநேரம் கொரோனா தொற்றுள்ளவர்களை அடையாளம் கண்ணடால் உரியவர்களுக்கு அறிவித்து அவர்களுக்கான சிகிச்சையினை பெற்றுக்கொடுப்பதுடன் இவ்விடயம் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.