கல்முனையில் கைக்குண்டு மீட்கப்பட்ட விவகாரம்:இளைஞனுக்கு விளக்கமறியல்

கல்முனையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தில் கைதான இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை கிட்டங்கி சேனைக்குடியிருப்பு பாண்டிருப்பு வீதியை இணைக்கும் சந்திக்கு அருகாமையில் திங்கட்கிழமை(28) காலை குறித்த புதிய கைக்குண்டு மீட்கப்பட்ட நிலையில் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டிருந்தது.வீதியோரத்தில் பயணம் செய்த நபர் ஒருவரினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய இப்புதிய கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் புலனாய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதனடிப்படையில் நற்பிட்டிமுனை ஜும்மா பள்ளி வீதியை சேர்ந்த அப்துல் ரசீம் அஜ்மல் (வயது-24) என்பவர் கைதானார்.கைதானவரை தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சிசிடிவி காணோளி தகவல் ஒன்றின் அடிப்படையில் மற்றுமிருவரை தேடி வருகின்றனர்.கைதானவர் திங்கட்கிழமை(28) மாலை கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

தொடர்ந்து மீட்கப்பட்ட குண்டினை மாலை 5 மணியளவில் விசேட அதிரடிப்படையின் விசேட அணி வருகை தந்து செயலிழப்பு செய்தனர்.அக்குண்டு பெரும் சத்தத்துடன் வெடித்ததுடன் அப்பகுதி அதிர்ந்ததை அவதானிக்க முடிந்தது.
மேலதிக இணைப்பு
ஞாயிற்றுக்கிழமை (27) நள்ளிரவு நற்பிட்டிமுனை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்கள் நடமாடுவதாக விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
எனினும் சந்தேக நபர் எவரும் கைது செய்யப்படவில்லை .ஆனால் குறித்த பகுதியில் கைக்குண்டொன்று வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டுள்ளது.மேலதிக தேடுதலுக்காக குறித்த பகுதிக்கு வந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கருகே உள்ள பற்றைக்குள் இருந்து பணப்பை ஒன்றை மீட்டுள்ளனர்.இவ்வாறு மீட்கப்பட்ட பணப்பையை அடிப்படையாக வைத்து சந்தேகத்தில் அதே பகுதியை சேர்ந்த 23 வயதினை உடைய இளைஞனை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதான இளைஞனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அவரது வீடு அம்பாறையில் இருந்து வரவழைக்கப்பட்ட விசேட தடயவியல் பொலிசாரினால் மோப்பநாயின் உதவியுடன் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.மேலும் நேற்று நள்ளிரவு அவ்வீதியால் சென்ற முச்சக்கரவண்டி சாரதியான நாவிதன்வெளி பிரதேசத்தை சேர்ந்த இளைஞனை அப்பகுதியில் நடமாடியதாக தெரிவிக்கப்படும் குறித்த ஆயுததாரிகள் தாக்கியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு ஒன்றை வழங்குவதற்காக கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட கைக்குண்டு இயக்கப்பட்டுள்ளதுடன் வெடிக்கும் நிலையில் காணப்படுவதனால் பிரதான வீதி மற்றும் உள்ளக வீதிகள் பொலிஸாரினால் போக்குவரத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்ற கல்முனை பொலிசார் விசாரணையை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.



