ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மக்களின் வீடுகளுக்கு சென்று மருத்துநீர் வழங்கல்….

வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற கொரோனா பாதுகாப்பு செயலணி விசேட கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமையவே இவ்வாறு வீடுகளுக்கு சென்று மருத்து நீர் வழங்கப்பட்டு வருகின்றது.
மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மக்களின் வீடுகளுக்கு சென்று ஆலய நிருவாகத்தால் மருத்துநீர் வழங்கப்படும் எனவும் யாரும் ஆலயங்களுக்கு செல்லத் தேவையில்லை எனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதனடிப்படையில் அனுமதிக்கப்பட்ட ஆலய நிருவாகம் மருத்து நீரை வழங்கி வருவதுடன் இதற்காக மக்கள் தமது ஒத்துழைப்பை வழங்குவதுடன் சமூக இடைவெளியை மக்கள் பேணி மருத்து நீரை பெற்றுக்கொள்வதை காண முடிந்தது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரிய பிள்ளையார் ஆலயம், மருதயடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயம், வம்மியடிப்பிள்ளையார் ஆலயம், ஸ்ரீ முருகன் ஆலயம், பத்திரகாளியம்மன் ஆலயம், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், கோளாவில் விக்னேஸ்வரர் ஆலயம், பனங்காடு பாசுபதேசுவரர் ஆலயம் கண்ணகிகிராமம் பிள்ளையார் ஆலயம் உள்ளிட்ட ஒன்பது ஆலயங்களுக்கு மருத்து நீர் வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
இதன் அடிப்படையில் ஆலயங்களில் தயாரிக்கப்பட்ட மருத்து நீர் வாகனங்களின் உதவியுடன் இன்று (13) பகல் 11 மணிமுதல் மாலை 5 மணிவரை ஆலயங்களுக்கு பொறுப்பாக ஒதுக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்கு கொண்டு சென்று வழங்கப்பட்டது.



