அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்…

-ம.கிரிசாந்-
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பகுதி விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (10) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்கரைப்பற்று மத்தி மணிக்கூட்டு கோபுரம் அருகில் இருந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் நோக்கி தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததனர்.
தற்போது அறுவடை ஆரம்பித்துள்ளதுடன் நெல்லின் உத்தரவாத நிலையை நெல் அறுவடை செய்தவுடன் ஒரு கிலோவுக்கு 100 ரூபாவாகவும் காய்ந்த ஈரப்பதன் அற்ற நெல்லை கிலோவிற்கு 120 ரூபாவாகவும் நிர்ணயம் செய்து உடனடியாக நெல் சந்தைப்படுத்தும் களஞ்சிய சாலைகளை திறந்து நெல்லினை முழுமையாக கொள்வனவு செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் கடந்த கால அரச கொள்கையினால் உரங்கள் கிடைக்காமல் நஷ்டத்தை சந்தித்ததுடன் உற்பத்தி விலையை விட கொள்வனவு விலை குறைவாக காணப்படுவதால் தாம் நஷ்டம் அடைவாதகவும் குறிப்பிட்டனர்.
அத்துடன் அரசினால் அறிவிக்கப்படும் மானியங்கள் உரிய நேரத்தில் தமக்கு வழங்கப்படுவதில்லை என்பதுடன் இதற்கான நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் ஊடாக அரசு மேற்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
நெல்லின் உற்பத்தி ஒரு ஏக்கருக்கு 160000/- செலவாகின்ற நிலையில் தற்போதைய உஷ்ணமான காலநிலையில் நெல் போதிய விளைச்சல் இன்றி 20 தொடக்கம் 25 மூடைகள் கிடைப்பதால் தாம் நஷ்டத்தை சந்திப்பதுடன் தற்போது ஒரு மூடை நெல் 3500, தொடக்கம் 4500/- வரை கொள்வனவு செய்வதால் 6000/- ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுவதாகவும் விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.
இதன்போது ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் இது தொடர்பில் தான் உரிய அமைச்சரிடம் ஜனாதிபதியிடம் ஆலோசித்து தீர்வினை பெற்று தருவதாக தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச உதவி பிரதேச செயலாளரிடமும் விவசாய அமைப்புகள் ஒன்றிணைந்த மகஜரினை கையளித்தனர்.
இதன்போது அம்பாறை உகன, தமனை பிரதேச விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.