இலங்கை

உறுதிப்பத்திரங்களின்றி வாழும் 207 குடும்பங்களுக்கான காணி உத்தரவுப்பத்திரம் வழங்கும் நிகழ்வு

வி.சுகிர்தகுமார் 

காணி உறுதிப்பத்திரங்களின்றி அரச காணிகளில் நீண்டகாலமாக வாழும் மக்களுக்கான உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணியை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

இதற்கமைவாக திருக்கோவில் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் 207 குடும்பங்களுக்கான காணி உத்தரவுப்பத்திரம் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் (17) நடைபெற்றது.

பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற உத்தரவுப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் மாகாண காணி ஆணையாளர் எச்.இ.எம்.டபிள்யு.ஜி. திசாநாயக்க மற்றும் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டதுடன் மாகாண காணி உதவி ஆணையாளர் ஜி.ரவிராஜ் தலைமைக்காரியாலய காணி உத்தியோகத்தர் கே.எல்.எம்.முசாமில் உதவிப்பிரதேச செயலாளர் க.சதிசேகரன் உள்ளிட்ட குடியேற்ற உத்தியோகத்தர்கள் காணி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது நீண்டகாலமாக காணி உறுதிப்பத்திரங்களின்றி அரச காணிகளில் குடியிருந்த மக்கள் மற்றும் விவசாய செய்கை மேற்கொண்டவர்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் அரச அதிகாரிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் கலந்து கொண்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் காணி ஆணையாளர் ஆகியோர் பிரதேச செயலாளரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

இதேநேரம் ஆவணங்கள் எவையுமின்றி அரச காணிகளை அபிவிருத்தி செய்து அல்லது அவற்றில் குடியிருந்துவரும் மக்களுக்கு அக்காணிகளுக்கான சட்ட ரீதியான ஆவணங்களை வழங்குவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் அன்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை கம்பஹா மற்றும் கொழும்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்காக விண்ணப்பிப்பதற்குரிய மாதிரி விண்ணப்பப்படிவம் மற்றும் வழிகாட்டுநெறிகளை உள்ளடக்கிய மேற்படி வர்த்தமானி அறிவித்தல் காணி ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 30ஆம் திகதி (2020/09/30) வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயனாளிகளைத் தெரிவுசெய்வதற்கான காணிக் கச்சேரி 2020.11.01 ஆம் திகதியில் இருந்து 2020.11.21ஆம் திகதிக்கிடையில் இயைபுடைய பிரதேசத்தின் பிரதேச செயலாளர் தீர்மானிக்கின்ற திகதியில் நடத்தப்படும் எனவும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் சமூக மட்டத்தில் செயற்பட்டுவரும் பொது நிறுவனங்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்கள், இதற்காக விண்ணப்பிக்க தகுதியுடைய மக்களை அறிவூட்டுவது பயனளிப்பதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker