மருத்துவ துறைக்கு தெரிவான எஸ்.அக்சயன் நீரில் மூழ்கி இறைபதம்: துயரத்தில் பிரதேசம்..! முழுமை விபரம்

அம்பாறை மாவட்டம் பொத்துவில், லாகுகலைக்கிடையிலுள்ள நீலகிரி ஆற்றில் நீராடிய மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
காரைதீவைச் சேர்ந்த 20 வயதுடைய சிவகரன் அக்சயன் என்ற மாணவனே இன்று காலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இவர் அண்மையில் வெளியான உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்று மாவட்டத்தில் 23வது இடத்தில் மருத்துவ துறைக்கு தெரிவாகியிருந்தார்.
காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இம்முறை மருத்துவத் துறைக்கு தெரிவான இரண்டு மாணவர்களுள் இவரும் ஒருவராவார்.
அவர் தனது குடும்பத்தோடு மூன்று நாட்களுக்கு முன்பு உகந்த மலை முருகன் ஆலயத்துக்கு சென்று தரித்துவிட்டு,
இன்று காலை திரும்பி வரும்பொழுது லாகுகலைக்கிடையிலுள்ள நீலகிரி ஆற்றிலே நீராடிய போதே நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.
பூதவுடல் பிரேத பரிசோதனைக்காக லாகுகலை வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.