உலக சுகாதார அமைப்புடனான உறவை ஒருவருடத்துக்குள் அமெரிக்கா முறித்துக் கொள்ளும்!

உலக சுகாதார அமைப்புடனான அமெரிக்காவின் உறவு, எதிர்வரும் 2021ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் திகதிக்கு பிறகு முறிவடையும் என ஐ.நா பொதுச்செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் (Stéphane Dujarric) கூறியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில், உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்க அதிகாரப்பூர்வமாக விலகுவது குறித்த அறிவிக்கையை வெள்ளை மாளிகை, நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளது என வெளியுறவுக் குழுவின் உறுப்பினரும், ஜனநாயக கட்சியின் முன்னணி செனட்டருமான ரொபர்ட் மெனண்டெஸ் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று விவகாரத்தில் சீனாவைப் பொறுப்பாக்குவதில் உலக சுகாதார நிறுவனம் தோல்வியடைந்து விட்டதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப், அந்த அமைப்புடனான அமெரிக்காவின் உறவைத் துண்டிப்பதாகக் கடந்த மே மாதமே அறிவித்தார்.
அமெரிக்காவின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகள் கேட்டுக்கொண்டபோதும், உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா சார்பில் அளிக்கப்பட்டு வரும் நிதி உலகளாவிய பொதுச் சுகாதார தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்று ட்ரம்ப் கூறினார்.
இந்தநிலையில், உலக சுகாதார அமைப்புடனான அமெரிக்காவின் உறவை முடித்துக் கொள்வதற்கான நடைமுறைகளை ட்ரம்ப் அரசாங்கம் தொடங்கியுள்ளது.
ஆனால், நவம்பர் மாத நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் ட்ரம்புக்கு எதிராக போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடன், ‘நான் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி ஏற்ற முதல் நாள், மீண்டும் உலக சுகாதார நிறுவனத்துடன் அமெரிக்கா இணையும்’ எனத் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்துக்கு அதிக நிதி அளிக்கும் ஒற்றை நாடான அமெரிக்கா, கடந்த 2019ஆம் ஆண்டு மட்டும் 400 மில்லியன் டொலர்களுக்கு மேல் நிதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.