இலங்கை

நெற்சந்தைப்படுத்தல் சபைக்கு நெல்லினை வழங்குவதில் விவசாயிகள் ஆர்வமின்மை

வி.சுகிர்தகுமார்

அம்பாரை மாவட்டத்தில் 63000 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நெற் செய்கையின் அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லினை நெற்சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்குவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை என்பதுடன் அவ்வாறு வழங்குவதில் பல சிக்கல்களையும் அவர்கள் எதிர் கொண்டு வருவதாக அறிய முடிகின்றது.

இதற்கு பல காரணங்களும் விவசாயிகளினால் முன்வைக்கப்படுகின்றது.
குறிப்பாக அறுவடை செய்யப்பட்ட நெல்லின் ஈரப்பதனை அகற்றி பதப்படுத்தலில் பல சிக்கல்களை விவசாயிகள் எதிர்கொண்டுள்ளதுடன் கால நிலை மாற்றமும் இதில் தாக்கம் செலுத்தியுள்ளதாக அறிய முடிகின்றது.

இந்நிலையில் நெற்சந்தைப்படுத்தல் சபையானது நெல்லினை கொள்வனவு செய்வதற்காக தயாராகவுள்ளதுடன் ஈரப்பதனற்ற பொருத்தமான நெல்லினை மாத்திரம் அவர்கள் கொள்வனவு செய்து வருகின்றனர்.
ஆனாலும் அவ்வாறு நெல்லை பதப்படுத்தப்படுவதில் நஷ்டம் உருவாவதுடன் நேரகாலமும் விரயமாவதாக விவசாயிகள் கருதுகின்றனர்.

இதனால் அறுவடை செய்யப்பட்ட பெரும்பாலான நெல் உற்பத்தி தனியார்களினால் கொள்வனவு செய்யப்பட்டு வருவதுடன் மூடை ஒன்று 3000 ஆயிரம் வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இருந்தபோதிலும் நெற்சந்தைப்படுத்தல் சபைக்கு குறித்தளவு நெல் விற்பனை செய்யப்பட வேண்டும் என கமநல சேவை திணைக்கள அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டபோதும் அதனை விவசாயிகள் பின்பற்ற முடியாத நிலையில் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் இம்முறை விவசாய செய்கையானது யானைகளின் ஊடுருவல் மற்றும் அறக்கொட்டித்தாக்கம் வெள்ளம் என பல சவால்களுக்கு முகம் கொடுத்த நிலையில் விவசாயிகள் தமது வயல் நிலங்களை பாதுகாத்து அறுவடை செய்து வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker