ஜோ பிடனின் வெற்றிக் குறித்து மௌனம் கலைத்தது சீனா!

அமெரிக்கத் தேர்தல் முடிவுகள், அமெரிக்க சட்டங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டு உறுதி செய்யப்பட வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு இந்தியா, இலங்கை உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எனினும் சீனா, ரஷ்யா, மெக்சிகோ போன்ற சில நாடுகள் வாழ்த்து தெரிவிக்காததுடன், எந்தக் கருத்தும் கூறவில்லை.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தின்கீழ், அமெரிக்க-சீன உறவு மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. இருப்பினும், ட்ரம்பின் தோல்விக்கு மகிழ்ச்சி அடையும் விதத்தில்கூட சீனா எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், ஜோ பிடனுக்கு சீனா வாழ்த்து தெரிவிக்காதது ஏன்? என சீன வெளிவிவகார அமைச்சின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின்னிடம் ஊடகங்கள் கேள்வியெழுப்பின.
இதற்குப் பதிலளித்த அவர், தேர்தலில், தான் வெற்றி பெற்றதாக ஜோ பிடன் அறிவித்துக்கொண்டதை கவனித்ததாகவும் ஆனால், இந்த தேர்தல் முடிவுகள், அமெரிக்க சட்டங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டு உறுதி செய்யப்பட வேண்டும் என தாம் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் இதன்போது சீனா எப்போது அறிக்கை வெளியிடும்? அல்லது ட்ரம்பின் நிலைப்பாட்டை அறிய காத்திருக்குமா? என ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நாங்கள் சர்வதேச நடைமுறைகளை பின்பற்றுவோம் என்று கூறியுள்ளார்.