ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு பிரதேச மேட்டுநிலப்பயிற்ச் செய்கையாளர்கள் சிறந்த விளைச்சலை பெற்றபோதும் – விற்பனை செய்ய முடியாமல் கவலையுடன் பெரும் நஷ்டத்தில்!!!

வி.சுகிர்தகுமார்

சிறந்த விளைச்சலை நாம் பெற்றபோதும் அவற்றை விற்பனை செய்ய முடியாமல் திண்டாடுகின்றோம். இதனால் நாம் பெரும் நஷ்டத்தினையும் எதிர்கொண்டுள்ளோம் என அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மேட்டுநிலப்பயிற்ச் செய்கையாளர்கள் கவலை தெரிவித்தனர்.

இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி தங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேட்டுநில பயிற்ச்செய்கையினை ஊக்குவிக்கும் பொருட்டு அரசாங்கமும் விவசாய அமைச்சு மற்றும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களும் பல்வேறுபட்ட உதவிகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றது. அத்தோடு உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து அவற்றில் தன்னிறைவு காண வேண்டும் என்பதிலும் பிரயத்தனத்தினை மேற்கொண்டு வருகின்றது.

இதன் பயனாக தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ள அதிகமான விளைச்சல் மூலம் குறித்த இலக்கினையும் அடைந்துள்ளது.

ஆனாலும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் கவலையடைந்துள்ள பயிர்ச்செய்கையாளர்களுக்கு எவ்வாறான உதவியினை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்பதே மக்களின் கேள்வியாக மாறியுள்ளது.

அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இம்முறை அதிகளவான பயிர்ச்செய்கையாளர்கள் வெண்டி, கத்தரி, கொச்சி, வத்தவை, சோளம் என பல பயிரினங்களை மேற்கொண்டு சிறந்த விளைச்சலையும் பெற்றுள்ளனர். ஆனாலும் அவற்றை வெளியிடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய முடியாத நிலையில் செய்வதறியாது கவலை அடைந்துள்ளனர்.
இதனால் விளைந்த விளைச்சலை கூட அறுவடை செய்யாமல் கைவிடும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக சாதாரண நாட்களில் கிலோ 70ரூபா தொடக்கம் விற்பனை செய்யப்பட்ட வெண்டி தற்போது 30ரூபாவிற்கும் விற்பனை செய்ய முடியாமலும் 80 ரூபா தொடக்கம் விற்பனை செய்யப்பட்ட ஒரு வத்தவை தற்போது எந்த விலைக்கும் விற்பனை செய்ய முடியாமல் கைவிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி தேவையான வசதிகளை செய்து கொடுத்து தம்மை பாதுகாப்பதுடன் எதிர்காலத்திலும் மேட்டுநிலப்பயிர்ச்செய்கை வீழ்ச்சியடையாமல் மேற்கொள்ள உதவித்திட்டங்களையோ அல்லது கடன் வசதிகளையோ வழங்க ஆவன செய்யுமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேநேரம் வெண்டி வத்தவை போன்ற பயிரினங்கள் அதிக விளைச்சலை பெற்றுள்ளதுடன் அறுவடை செய்ய முடியாமல் கைவிட்ட நிலையில் அவை பழுதடைந்துள்ளது தேவையற்று கிடப்பதையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker