ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளர் வி.பபாகரன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்….

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர் வினாசித்தம்பி பபாகரன் இன்று (19) மதியம் சுபவேளையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ரெட்ணம் சுவாகர் தலைமையில் இடம்பெற்ற இவ் வைபவத்தின் விருந்தினர்களாக திருக்கோவில் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், தமன உதவி பிரதேச செயலாளர் ஆகிய நிருவாக சேவை அதிகாரிகளுடன் தெஹியத்தகண்டிய வலயக் கல்விப் பணிமனையின் கணக்காளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஹம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலைத் திட்டப் பொறியியலாளர் ஆகிய பதவிநிலை உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோளாவில் கிராமத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட இவர் தனது ஆரம்பக் கல்வியை கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தில் கற்றதுடன் உயர்தரக் கல்வியை அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய கல்லூரியில் பயின்று, கடந்த 2003 ஆம் வருடம் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்துக்குத் தெரிவாகி அங்கு மனித வள முகாமைத்துவத்தில் சிறப்புக் கற்கையுடன் தனது இளமானிப் பட்டப்படிப்பைப் பூர்த்திசெய்திருந்தார். கடந்த 2012 ஆம் வருடம் இடம்பெற்ற திறந்த போட்டிப் பரீட்சை மூலம் இலங்கை நிருவாக சேவைக்குத் தெரிவான அவர் மன்னார் மாவட்டத்துக்கான உதவி அரசாங்க அதிபராகத் தனது அரச சேவையைத் தொடர்ந்தவேளையில் விசேட புலமைப்பரிசில் மூலம் அவுஸ்திரேலிய தேசத்தில் மனித வள முகாமைத்துவத்தில் தனது இரண்டு வருட முதுமானிக் கற்கையை முடித்த பின்னர் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உதவி செயலாளராகக் கடமையாற்றிவந்த நிலையில் இந்த நியமனத்தைப் பெற்றுக்கொண்டு தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
பிரதேச செயலாளர் தனது தாயாரின் ஆசிகளுடன் கடமையை ஏற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
நன்றி : Divisional Secretariat Alayadivembu (fb) ,வி.சுகிர்தகுமார்