ஆலையடிவேம்பு சமுர்த்தி வங்கியினூடாக வீடுகளுக்கு சென்று பயனாளிகளுக்கு கடன் வழங்கிவைப்பு …

வி.சுகிர்தகுமார்
ஜனாதிபதி கோத்தபாயவின் ஆலோசனைக்கமைய கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டு தொழிலை இழந்துள்ள சமுர்த்தி கட்டாய சேமிப்பு
கணக்குள்ளவர்களுக்கான சஹனபியவர எனும் சலுகைக்கடன் திட்டம் உடன் அமுலுக்கு வரும் வகையில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சுற்றுநிருபத்திற்கமைய சமுர்த்தி வங்கிகளினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸின் உத்தரவிற்கமைய குறித்த கடன் சமுர்த்தி வங்கிகளினூடாக வழங்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக அம்பாரை மாவட்டத்தில் இதுவரையில் 41456 கடன் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி வங்கிகளிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் பிரதேச செயலாளர் கே.லவநாதனின் ஆலோசனைக்கமைய ஆலையடிவேம்பு வடக்கு மற்றும் தெற்கு வங்கியிலும் உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் இன்று கடமையில் ஈடுபட்டிருந்தததை அவதானிக்க முடிந்ததுடன் வீடுகளுக்கு சென்று கடனையும் வழங்கினர்.
இச்சலுகைக்கடனின் சலுகைக் காலம் 06 மாதங்கள் என்பதுடன் 12 மாதங்களுக்குள் தவணை அடிப்படையில் வட்டியின்றி அறிவிடப்பட வேண்டும் .

