அரச காணிகளை முதலீட்டு வாய்ப்பிற்காக வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

வி.சுகிர்தகுமார்
ஒரு லட்சம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து உருவாக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைவாக காணிகளற்றவர்களுக்கு அரச காணிகளை முதலீட்டு வாய்ப்பிற்காக வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காணி முகாமைத்துவ அலுவல்கள் அரச தொழில் முயற்சிக் காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு மற்றும் காணி உபயோக கொள்கை திட்டமிடல் திணைக்களத்தினூடாக முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்கு அமைவாக விண்ணப்பித்துள்ளவர்களுக்கான நேர்முகத்தேர்வு இன்று ஆரம்பிக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் வழிகாட்டலில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் தலைமையில் இடம்பெற்ற நேர்முகத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள 1427 பேரில் முதற்கட்டடாக 320 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.
அழைக்கப்பட்டவ்hகளில் அதிகமானவர்கள் இந்நேர்முகப்பரீட்சைக்கு தோற்றியதுடன் அவர்களின் தேவை தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டது.
காணி உறுதி பெற்றுக்கொள்ளல் , காணி அளவையிடப்பட்டு அளவைப்படம் தயாரித்தல், காணியின் பிணக்குகளை தீர்த்தல், காணி அடையாளம் வைத்து கடன் பெறுதல், தயாரிப்புக்களைவ விற்பனை செய்வதற்கு உதவி பெறுதல், தயாரிப்புக்களை மேம்படுத்துவதற்கு உதவி செய்தல், தயாரிப்புக்களுக்கான இயந்திரங்களை பெறுவதற்கு உதவி பெறுதல் மற்றும் ஏனைய காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணல் போன்ற விடயங்களும் இந்நேர்முகப்பரீட்சையின்போது ஆராயப்பட்டது.