இலங்கை

அத்தியாவசிய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அதனை உறுதிப்படுத்த வேண்டும்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் அத்தியாவசிய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அதனை உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தை துஷ்பிரயோகம் செய்வது சட்ட விரோதமாகும் என்று கொவிட் 19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கருத்திற்கொண்டு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டதாகவும் இது வைரசை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார ஆலோசனைப் படி விஞ்ஞான ரீதியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும் என்றும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஆடைத் தொழில்கள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் மருந்தகங்களின் செயற்பாடுகள் அனுமதிக்கப்படும். தொழிலுக்குச் செல்பவர்கள் விஷேட அனுமதி பெறத் தேவையில்லை. வீதித்தடைகளில் உள்ள பொலிஸார் இராணுவத்தினரிடம் உங்களது அடையாள அட்டையைக் காட்டி அனுமதி பெற முடியும்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பு ஊசி ஏற்றுவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் இரண்டு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

இதன்போது சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 73 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. சைனோ பார்ம் தடுப்பூசியின் முதலாவது டோசை நேற்று 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பெற்றுள்ளனர் என்றும் கொவிட் 19 வைரசு தொற்றை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை (20) இரவு 10.00 மணி முதல் 30ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker