அதிவேக வீதிகளில் பயணித்த வாகனங்களில் ஆசனப் பட்டி அணியாத 9,000 பேருக்கு அபராதம்

அதிவேக வீதிகளில் பயணித்த வாகனங்களில் ஆசனப்பட்டி (Seat Belt) அணியாது பயணித்த 9,000 சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிவேக வீதி பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
அதிவேக வீதிகளின் அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களிலும் பொலிஸார் விசேட சோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சட்டத்தை முறையாக அமுல்படுத்துவதை உறுதி செய்வதற்காக இந்தச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதிவேக வீதிகளில் பயணிக்கும் போது சாரதிகள் மாத்திரமன்றி, வாகனத்திலுள்ள அனைத்துப் பயணிகளும் ஆசனப் பட்டைகளை அணிவது கட்டாயமாகும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, இந்த விதிமுறையை எவ்வித விதிவிலக்கும் இன்றி கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு அதிவேக வீதிகளில் கடமைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை தொடரும் என்பதால், வாகனங்களில் பயணிக்கும் போது சாரதிகள் மற்றும் பயணிகள் ஆசனப் பட்டி அணிவதை கட்டாயமாக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



