FACEBOOK உடன் இணைந்து மோசடி – GOOGLE மீது புகார்!

இணைய விளம்பரங்களைக் கவர்வதற்காக முறைகேட்டில் ஈடுபட்டதாக கூகுள் நிறுவனத்தின் மீது அமெரிக்காவின் டெக்சாஸ் உள்ளிட்ட 10 மாகாணங்கள் புகார் தெரிவித்துள்ளன.
பிரபல தேடுப்பொறி நிறுவனமாக உலகம் முழுவதும் கூகுள் நிறுவனம் அறியப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெக்சாஸ் அட்டர்னி ஜெனரல் கென் பாக்ஸ்டன் தலைமையிலான அமெரிக்காவின் 10 மாகாணங்கள் கூகுள் மீது முறைகேட்டு புகாரைத் தெரிவித்துள்ளன.
இணைய விளம்பரங்களை வாங்க விரும்பும் தளங்களுடன் இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கூகுள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
லட்சக்கணக்கான இணையதளப் பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கத் தவறியதாகவும், பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து முறையற்ற தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் கூகுள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்த கூகுள் நிறுவனம் நாங்கள் வணிகங்கள் மற்றும் நுகர்வோருக்கு பயனளிக்கும் வகையில் அதிநவீன விளம்பர தொழில்நுட்ப சேவைகளில் முதலீடு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது.
இணைய விளம்பரங்கள் மூலம் கூகுள் நிறுவனத்திற்கு நடப்பாண்டு 420 கோடி டாலர் வருவாய் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.