இலங்கை

முற்றாக முடக்கப்பட்டன கொழும்பில் 21 இடங்கள்!

கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 155 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கொழும்பு மாவட்டத்தின் நிலைமை மோசமடைந்துள்ளது. அங்கு 21 இடங்கள் முற்றாக முடக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு 14 நாகலகம் வீதி,  கொழும்பு 13 கொட்டாஞ்சேனை வீதியின் 64 ஆம் தோட்டம்,  கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை, கொழும்பு 11 குணசிங்கபுர,  வாழைத்தோட்டம் பகுதிகள்,  பம்பலப்பிட்டி – பிரிஷ்டா பிளேஸ்,  மருதானையின் இமாமுல் அரூஸ் மாவத்தை,  ஆர்னோல்ட் ரத்நாயக்க மாவத்தை, நாரஹேன்பிட்டி – தாபரே மாவத்தை, கொழும்பு 7 சுதந்திர சதுக்கம் – 60 ஆம் தோட்டம், ஹெவலொக் லேன், ஒருகொடவத்த – மஜீத் பிளேஸ்,  மீத்தோட்டமுல்லை – வெடுகொடவத்தை,  பெரேரா மாவத்தை பகுதிகள்,  வெல்லம்பிட்டி – வெலேவத்தை,  மஹபுத்துகமுவ – நவாரவத்தை,  மிரிஹானை – விமலவத்த வீதி, தெஹிவளை – றப்பர் தோட்ட வீதி,  அருணாலோக்க மாவத்தை,  பிலியந்தலை பகுதியின்  கிராமோதய மாவத்தை,  பண்னிபிட்டிய – பலனவத்த ஆகிய 21 இடங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் முடக்கப்பட்ட பகுதிகளான நாரஹேன்பிட்டி – தாபரே மாவத்தை, கொழும்பு 7 – சுதந்திர சதுக்கம் – 60 ஆம் தோட்டம், ஹெவலொக் லேன் ஆகிய பகுதிகளில் புதிதாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து அப்பகுதிகளைச் சேர்ந்த 134 பேர் கொரோனா தொற்று குறித்த விசேட பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், மட்டக்களப்பு – புனானை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு நேற்று அனுப்பிவைக்கப்பட்டனர்.

நாரஹேன்பிட்டி – தாபரே மாவத்தையில் ஏற்கனவே இரண்டு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், புதிதாக  இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட முதலாவது தொற்றாளரின் அயல் வீட்டுப் பெண் ஒருவரும், குறித்த வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த இரட்டைப் பிள்ளைகளில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இந்த நால்வருடன் சேர்த்து கொழும்பில் புதிதாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில்,  கொழும்பு 7 , சுதந்திர சதுக்கம் , 60 ஆம் தோட்டத்தில்  கண்டறியப்பட்ட தொற்றாளர், ஏற்கனவே பண்டாரநாயக்க மாவத்தைக்குச் சென்று திரும்பி அங்கு மறைந்திருந்த நபரின் அயல் வீட்டைச் சேர்ந்தவர் என கொழும்பு மாநகர சபையின் பிரதான  சுகாதார வைத்திய அதிகாரிம் விசேட வைத்திய நிபுணர் ருவன் விஜயமுனி தெரிவித்தார்.

அத்துடன்  ஹெவலொக் பகுதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர் மாநகர சபையில் சேவையாற்றும் ஊழியர் எனவும், அவர் ஏற்கனவே பண்டாரநாயக்க மாவத்தையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளரான  லொறி சாரதியுடன் ஒன்றாகக் கடமையாற்றியவர் எனவும் விசேட வைத்திய நிபுணர் ருவன் விஜயமுனி தெரிவித்தார்.

இந்தநிலையில், கொழும்புக்குள் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் தொடர்ந்தும் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்களைக் கண்டறிய பி.சி.ஆர். பரிசோதனைகள் மக்கள் செறிந்து வாழும் கொழும்பு தோட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker