பாடலாக்கத்தில் தேசிய விருது பெறும் கலைஞர்.ஏ.ஓ.அனல்


வி.சுகிர்தகுமார்
அரச நிறுவனங்களில் சேவைகளில் ஈடுபட்டிருக்கும் உத்தியோகத்தர்களின் ஆக்கத்திறன்களை மேம்படுத்துவதற்காகவும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவும் வருடாவருடம் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு கலையிலக்கியம் தொடர்பில் சிறுகதை, சிறுவராக்கம், பாடலாக்கம், கவிதையாக்கம், சித்திரம் மற்றும் குறுநாடகம் போன்ற பிரிவுகளின் கீழ் போட்டிகளை நடாத்திவருகின்றது.
அந்த அடிப்படையில் 2020 ஆம் ஆண்டில் அரச ஊழியர்களுக்கிடையிலான போட்டிகளில் பாடலாக்கம் எழுதுதல் போட்டியில் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குற்பட்ட துறைநீலாவணை மாகாவித்தியாலயம் சார்பில் போட்டியிட்ட ஓவியத்துறை ஆசிரியர் கலைஞர்.ஏ.ஓ.அனல் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். இவர் எழுதிய “உனக்கென வாழும் உறவுகள் யாவும் உயிரினைத் தொடுகின்ற வரையில்” என்ற பாடல் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டமை பட்டிருப்பு கல்வி வலயத்திற்கும் துறைநீலாவணை பாடசாலை சமூகத்திற்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.



