2020 உயர்தரப் பரீட்சை நாளை: அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலைக்கு மத்தியில் சுகாதாரப் பாதுகாப்புடன் நாளை கல்விப் பொதுதராதர உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அனைத்து பரீட்சை நிலையங்களிலும் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர்தரப் பரீட்சைகள் நாளை (திங்கட்கிழமை) ஆரம்பமாகி நவம்பர் ஆறாம் திகதி வரை நடைபெறவுள்ளன.
இம்முறை மூன்று இலட்சத்து 62 ஆயிரத்து 824 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களில் மூன்று இலட்சத்து 19 ஆயிரத்து 485 பேர் புதிய பாடத்திட்டத்திலும் 43 ஆயிரத்து 339 பேர் பழைய பாடத் திட்டத்திலும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
புதிய பாடத்திட்டத்தில் இரண்டு இலட்சத்து 77 ஆயிரத்து 580 பேர் பாடசாலை மூல பரீட்சாத்திகளாகவும் ஏனைய 41 ஆயிரத்து 905 பேர் தனியார் பரீட்சாத்திகளாவும் உள்ளனர்.
மேலும், உயர்தரப் பரீட்சைகளுக்காக நாடளாவிய ரீதியில் இரண்டாயிரத்து 648 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு 316 ஒருங்கிணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இன்று தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை கொரோனா நெருக்கடியில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.