இலங்கை

மக்கள் நலன்சார்ந்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தலாம் எனும் நம்பிக்கையில் நாம் செயற்பட்டோம். ஆனாலும் அந்நிலை மாற்றமடைந்துள்ளது.-பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்

வி.சுகிர்தகுமார்

புதிய அரசாங்கம் நல்ல சூழலை ஏற்படுத்தும் போது தமிழர் நலன்சார்ந்து பேச்சுவார்த்தை நடத்தலாம் எனும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்காமல் நாங்கள் வெளியேறினோம். ஆனால் நடந்ததோ வேறு என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தில் பல்வேறு சமூக பணிகளை முன்னெடுத்துவரும் கோளாவில் மக்கள் அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் இன்று (07) நடைபெற்ற பொது நூலக திறப்பு விழாவில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் மக்கள் நலன்சார்ந்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தலாம் எனும் நம்பிக்கையில் நாம் செயற்பட்டோம். ஆனாலும் அந்நிலைமாறி தற்போது எமது ஆலயங்கள் சுவிகரீக்கப்படுகின்றன. இந்த நிலை மாறவேண்டும்.

நாங்கள் வன்முறையாளர்கள் அல்ல. இந்த நாட்டிலே அனைத்து இனங்களோடும் இணைந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என நினைப்பவர்கள். இந்நிலையில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை எனும் ஜனநாயக ரீதியான எழுச்சி பேரணியை பல அடக்குமுறைகளை கொண்டு அவர்களே தடுக்க முயன்றனர். அப்போதும் நாங்கள் வன்முறையை கையாளவில்லை. இந்த நாட்டிலே ஜனநாயகம் நிலை நிறுத்தப்படவேண்டும் சமாதானம் உருவாக்கப்படவேண்டும் என பாடுபடுகின்றோம் என்றார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ன செய்கின்றது என்கின்றனர் சிலர். எங்களது மக்கள் எங்களது மண்ணில் வாழ வேண்டும் என்பதற்காக குரல் கொடுக்கின்றோம். மாறாக நாங்கள் தனிமனிதராக வாழ வேண்டும் என்றால் வாழ்ந்து சென்றிருக்கலாம். இதனை மறந்து சிலர் வேறு திசையில் செல்கின்றனர். இதனை நீங்கள் நிறுத்த வேண்டும். இல்லையேல் 22 உறுப்பினர் 10 ஆனது போல் எதிர்காலத்தில் தமிழர்களுக்கு குரல் கொடுக்க பாராளுமன்றத்தில் யாரும் இருக்கமாட்டார்கள்.

ஒரு நூல் நிலையம் திறக்கப்பட்டால் ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படும் என்றனர். ஆனால்; தமிழர்களுக்கு இந்த நாட்டிலே அவ்வாறு இல்லை. 1981ஆம் ஆண்டு 97000 அயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இருந்த யாழ் நூல்நிலையம் ஏன் திட்டமிட்டு எரிக்கப்பட்டது என்பதை நினைத்து பாருங்கள். அதிகமாக படித்த சமூகம் யாழ்ப்பாணத்தில் இருந்தமையே காரணம் எனவும் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker