Uncategorised

பிரித்தானியாவில் சுதந்திர தின கரிநாள் போராட்டம்

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதியை கரிநாளாகக் குறிக்கும் வகையில், பிரித்தானியாவின் லண்டன் நகரில் நேற்று (04/02/2026) தன்னாட்சிக்கான உரிமைக்குரல் போராட்டம் வெகு விமரிசையாக இடம்பெற்றது.

முற்பகல் 11.00 மணியளவில் ஆரம்பமான இப்போராட்டம், இலங்கை உயர் ஸ்தானிகராலயம் முன்பாக நடைபெற்றது. லண்டனில் வாழும் தமிழர்கள் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மக்கள் இதில் கலந்துகொண்டு, தமது அரசியல் கோரிக்கைகளையும் தன்னாட்சிக்கான உரிமையையும் கோசங்களூடாக வெளிப்படுத்தினர்.

இந்த போராட்டம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னணியில், பிரித்தானியாவில் இயங்கும் பல்வேறு தமிழ் அமைப்புகளுடன் இணைந்து ஒருங்கிணைக்கப்பட்டது. “சிந்தனை வழியில் அணிதிரள்வோம்” என்ற அழைப்புடன், உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து தன்னாட்சிக்கான உரிமையை வலியுறுத்த வேண்டும் என உரிமையுடன் அறைகூவல் விடுக்கப்பட்டது.

போராட்டம் நடைபெறும் நிலையில், மேலும் பலர் தொடர்ந்தும் போராட்ட இடத்துக்கு வருகை தந்த வண்ணம் உள்ளதாகவும், அமைதியான முறையில் ஆனால் உறுதியான அரசியல் குரலுடன் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுதந்திரம் என அறிவிக்கப்பட்ட நாளிலேயே தமிழினத்தின் அடிப்படை அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டுவரும் நிலையை உலகின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் நோக்குடன், இந்த கரிநாள் போராட்டம் முக்கியத்துவம் பெற்றதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker