அமெரிக்காவுடனான முழுமையான போருக்கு தயாராக இருப்பதாக ஈரான் அறிவிப்பு!

அமெரிக்கா தங்கள் மீது தொடர்ந்து பொய்க் குற்றச்சாட்டுகளை தொடுக்குமாயின் அவை அமெரிக்காவின் தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கு வழிவகுக்கும் என ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளது.

சவுதி அரேபியாவின் எரிபொருள் சுத்திரிப்பு மற்றும் மசகு எண்ணெய் களஞ்சியங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து ஈரான் அமெரிக்காவுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
யேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் சுமார் 50 லட்சம் பீப்பாய் மசகு எண்ணெய் எரிந்து நாசமானது.
இந்த உற்பத்தி பாதிப்பால், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 10 சதவீதம் அதிகரித்தது. அமெரிக்காவின் நியூயோர்க் பங்குபரிமாற்றச் சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 5.61 டொலர் அளவுக்கு உயர்ந்து, 60.46 டொலராக அதிகரித்தது.
பிரன்ட் மசகு எண்ணெய் 11.77 சதவீதம் விலை உயர்ந்து 67.31 டொலராக அதிகரித்துள்ளது. எதிர்வரும் காலங்களிலும் இந்தவிலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அமெரிக்காவின் பெட்ரோலிய மசகு எண்ணெய் கையிருப்பில் இருந்து மசகு எண்ணெயை பயன்படுத்திக்கொள்ள அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அனுமதியளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சவுதி அரேபியாவில் உள்ள எரிபொருள் களஞ்சியம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மசகு எண்ணெய் விலை உயர்வில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே அமெரிக்காவின் பெட்ரோலிய மசகு எண்ணெய் கையிருப்பை பயன்படுத்திக் கொள்ள அனுமதியளிக்கிறேன். சர்வதேச சந்தையில் நிலை சீரடையும் வரை கையிருப்பை பயன்படுத்தலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு டுவிட்டர் பதிவில் அவர், “சவுதி அரேபியாவின் எரிபொருள் களஞ்சியம் மீது தாக்குதல் நடத்தியது யார் என்பதை நாங்கள் அறிவோம். குற்றவாளிகளுக்கு பாடம் புகட்ட தயாராக இருக்கிறோம். அத்துமீறிய இந்த தாக்குதலுக்கு எதிர்வினையாற்ற எங்கள் ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. எனினும் தாக்குதலுக்கு யார் காரணம் என்பது குறித்து சவுதி அரேபியா கூறும் வரை காத்திருப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலை மீது ஈரான்தான் தாக்குதல் நடத்தியது என்று அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என கூறி ஈரான் மறுத்துள்ளது.
 
				 
					


