இலங்கை

இணைய வழி வகுப்புகளில் சிறிய கைபேசிகளை பாவிப்பதன் மூலம் கண் பாதிக்கப்படலாம் எச்சரிக்கை!

இணைய வழி வகுப்புகளில் சிறிய கைபேசிகளை பாவிப்பதன் மூலம் கண் பாதிக்கப்படலாம் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

தற்பொழுது கொரொனா அச்ச நிலைமை காரணமாக தனியார் கல்வி நிலையங்கள் செயற்படாத நிலையில் இணையவழி மூலம் அதிகளவிலான கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுதல் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா காலத்திற்கு பின்னர் இளம் பிள்ளைகளின் கல்வியில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாடசாலை கல்வியானது இடையிட்டு நடைபெறுவதும் பாடசாலை கல்வி செயற்பாட்டுக்கு  தொடர்ச்சியாக செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இது குழந்தைகளின் கல்வியில் பாதிப்பையும்  தாக்கத்தினையும் ஏற்படுத்தும்.

ஆனால் கல்வி நடவடிக்கைகளை கூட்டுவதற்காக ஆசிரிய சமூகமும் கல்விச் சமூகமும் தற்போது இணையவழி மூலம் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள். இது ஓரளவுக்கு ஆரோக்கியமானது என்றாலும் நேரடியாக கல்வி கற்பித்தலுக்கும் இணையவழி மூலம் கல்வி கற்பிப்பதற்கும் இடையில் வேறுபாடு உள்ளது.

அதாவது  ஒரு ஆசிரியர் நேரடியாக கல்வி கற்பிப்பதிலும் கணினி மூலம் கல்வி கற்பிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. குறிப்பாக மாணவர்களை அருகில் வைத்து கற்பிக்கும்போது உடல் மொழி மூலமும் சில கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடியதாக உள்ளது இணையவழி மூலம் ஏற்படுகிற போது அது இடம்பெறாது.

மேலும் கணணி திரைகளின்  மூலம் கற்பிக்கப்படுகிற போது ஒரு குறிப்பிட்ட பகுதியினை மாத்திரமே மாணவர்கள் பார்த்துக்கொள்வார்கள். தொடர்ச்சியாக கணனித் திரையை பார்க்கும் போது மூளைச் சோர்வு நிலை ஏற்படுகின்றது. இதனால் அவர்களது கிரகிக்கின்ற தன்மை குறையலாம்.

இதனால் இணைய வழி வகுப்புகளைநேரடி கல்வியுடன் ஒப்பிடும்போது தரம் குறைந்ததாகவே காணப்படுகின்றது.

அடுத்ததாக தொடர்ச்சியாக இணைய வழிக்கல்வியில் ஈடுபடும் போது அவர்களுடைய கண்பார்வையில் பாதிப்பு ஏற்படலாம். குறித்த ஒரு பகுதியை மாத்திரம் தொடர்ச்சியாக நோக்கும்போது கட்புலன் பாதிப்பு ஏற்படும்  தலையிடி, கண் நோ ஏற்படும்.

இதனால் மாணவர்கள் சிரத்தையுடன் கல்வியை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படும் நீண்ட நாட்களுக்கு பிறகு கண் பார்வைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

குறிப்பாக ஒவ்வொருவருடைய பொருளாதார வசதிகளுக்கு ஏற்ப இணையவழி வகுப்பிற்கு தொலைபேசிகளை பாவிப்பார்கள். அதிகளவிலான இணைய வழி வகுப்புகளில் கலந்து கொள்வோர் சிறிய தொலைபேசிகளை பாவிப்பதன் மூலம் அவர்களுடைய கண் பாதிக்கக் கூடிய நிலை காணப்படுகிறது. இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

அத்தோடு இணைய வகுப்புகளின் போது கட்டாயமாக அடிக்கடி இடைவெளி விட்டு கண்களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும். தொடர்ச்சியாக சில இணைய வழி வகுப்புகள்  நடைபெறுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

எனினும்  இணையவழி வகுப்புகளின் போது இடைவெளி விட்டு கண்களுக்கு ஓய்வு கொடுத்து  வகுப்புகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டியது முக்கியமான விடயமாகும்.

இணைய வழி மூல தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலம் மனிதனுடன் மனிதன் தொடர்பு கொள்வதற்கான சந்தர்ப்பம் குறைகின்றது. இது ஒருவித உளதாக்கத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக மனச்சோர்வு நிலை ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன இதற்கு நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

முக கவசம் போடுவது போல் கொரோனாவிற்காக மக்கள் மன கவசத்தையும் மக்கள் கையில் பற்ற வேண்டிய காலமிது“ எனத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker