மகனுக்கு உடந்தையாக இருந்த தந்தை விளக்கமறியலில்

திருகோணமலை கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மகனுக்கு பதினைந்து வயதுடைய சிறுமியை அழைத்துச் செல்வதற்கு உடந்தையாக இருந்த தந்தையொருவரை இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று (6) உத்தரவிட்டார்.
பூட்டி குளம், ஸ்ரீ பக்மிகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் 19 வயதுடைய மகனொருவன் ஸ்ரீ பக்மிகம பகுதியிலுள்ள பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 21 ஆம் திகதி சந்தேக நபரின் மகன் சிறுமியை வேறு பகுதிக்குச் அழைத்துச் சென்றுள்ளார்.
சிறுமியின் பெற்றோர் கோமரங்கடவெல பொலிஸ் நிலையத்தில் தனது 15 வயதுடைய மகளை சந்தேக நபரின் மகன் அழைத்துச் செல்வதற்கு உடந்தையாக இருந்துள்ளதாகவும் தனது மகள் இருக்கும் இடம் சந்தேக நபருக்கு தெரியும் எனவும் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
பின்னர், திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் சந்தேகநபரை ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.