இலங்கை

மனைவி பிள்ளையை கொன்ற வழக்கின் சந்தேக நபரே இந்தியா செல்ல முற்பட்ட நிலையில் கைது!

மனைவி மற்றும் பிள்ளையை படுகொலை செய்தார் எனும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள எதிரியே இந்தியா தப்பி செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு தப்பி செல்ல முற்பட்ட நபரையும் , அவரை அழைத்து சென்ற படகோட்டியையும் கடற்படையினர் கைது செய்து பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

தப்பி செல்ல முற்பட்ட நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையில், குறித்த நபர் மனைவி மற்றும் பிள்ளையை படுகொலை செய்தார் எனும் குற்றச்சாட்டில் திருகோணமலை மேல் நீதிமன்றில்   குற்றப்பத்திரிகை  தாக்கல்  செய்யப்பட்டு  வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

குறித்த வழக்கில் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்ட நபரே இந்தியா தப்பி செல்ல முற்பட்டுளார். என பருத்தித்துறை பொலிசாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

பருத்தித்துறை கடற்பரப்பில் இருந்து திருகோணமலையை சேர்ந்த துரைராசா இலட்சுமணன் எனும் நபர் பருத்தித்துறை இன்பசிட்டி பகுதியை சேர்ந்த புனேஸ்வரன் எனும் படகோட்டியின் உதவியுடன் இன்றைய தினம்(வியாழக்கிழமை) அதிகாலை  இந்தியாவுக்கு தப்பி செல்ல முயன்றுள்ளார்.

குறித்த இருவரும் சென்ற படகு சந்தேகத்திற்கு இடமாக இருந்தமையால் கடற்படையினர் வழிமறித்து சோதனை செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது திருகோணமலை நபர் இந்தியாவுக்கு தப்பி செல்வதை கண்டறிந்தனர்.

அதனை அடுத்து இருவரையும் கைது செய்த கடற்படையினர், மேலதிக விசாரணைகளுக்காக பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதேவேளை கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இலங்கை, இந்திய பணத்தாள்களும் இரண்டு கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த படகோட்டி ஏற்கனவே கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் எனவும், இருவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker