இலங்கை

அரசமைப்பு நிறைவேறாவிட்டால் நான் நிச்சயமாக பதவி துறப்பேன்! தனது நிலைப்பாட்டில் சுமந்திரன் உறுதி

நான் பதவி விலகுவதா இல்லையா என்பதை நானே தீர்மானிப்பேன். அதனை வேறு யாரும் தீர்மானிக்க முடியாது. ஆனாலும் அரசியலமைப்பு நிறைவேறாவிட்டால் பதவி விலகுவேன் என்ற நிலைப்பாட்டிலேயே இன்றைக்கும் நான் இருக்கின்றேன். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் மீது கூட்டமைப்பு சார்ந்தவர்களும் ஏனையவர்களும் முன்வைத்து வருகின்ற விமர்சனங்கள் மற்றும் பதவி விலக வேண்டுமென்று தெரிவித்துள்ள விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

இவ்வாறான கருத்துக்களை எங்கள் மீது முன்வைப்பதை நாங்கள் தவிர்க்க முடியாத ஒரு விடயம். வெளியிலே இருக்கிறவர்கள் விமர்சிப்பதும் கூட்டமைப்பிற்குள்ளே ஒவ்வொரு கட்சிகளிலேயும் இருப்பவர்கள் விமர்சிப்பதும் சாதாரண ஐனநாயக சூழலிலே ஏற்படுகிற ஒரு நிலைமை. ஆகையினாலே அது குறித்து நாங்கள் விசனப்பட்டுக் கொண்டிருக்காமல் அந்தச் சவால்களையும் நாங்கள் சந்தித்து முன்னேற வேண்டும்.

புதிய அரசியலமைப்பு உருவாக்க முடியாமல் போனால் பதவி விலகுவேன் என்று நான் சொல்லியிருக்கிறேன். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் முற்றாக கைவிடப்பட்டது என்று இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. அதனுடைய வரைபொன்று இருக்கிறது.

இந்த இடைப்பட்ட காலத்திலே அவர்கள் அதனைச் செய்வார்களா என்பது சந்தேகம். ஆனாலும் சிறிலங்கா பொதுஐன பெரமுன கூட புதிய அரசியலமைப்பு உருவாக்குவோம் என்று சொல்யிருக்கின்றார்கள்.

தேர்தலுக்குப் பிறகும் மஹிந்த ராஐபக்ச என்னோடு நடத்திய சந்திப்பிலே இப்பொழுது அதைச் செய்ய முடியாது. பொதுத் தேர்தலுக்குப் பிறகு அதனைச் செய்வோம் என்று சொல்லியிருக்கின்றார். அவர்கள் சொன்னார்கள் என்று அதை நான் நம்பிக்கை வைத்து பேசவில்லை.

ஆனால் புதிய அரசமைப்பு உருவாக்கம் முற்றாக கைவிடப்பட்டு விட்டது என்ற தீர்மானத்திற்கு  இன்னமும் வரவில்லை. அப்படியான ஒரு தீர்மானம் எடுக்கப்படுகின்ற நேரத்தில் நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறப்பேன்.

இதே வேளை பதவி விலக வேண்டுமென்று சொல்வது அல்லது அப்படிச் சொல்கிறவர்கள் தாங்கள் அதனாலே ஏதாவது அரசியல் இலாபம் அடையலாம் என்று சிந்திக்கிறார்கள் போல் தென்படுகிறது. நான் பதவி விலகுவது விலகாதது அல்லது எப்பொழுது அதைச் செய்ய வேண்டுமென்று தீர்மானிப்பது நான் தான். ஆகவே பதவி விலகுவதா இல்லையா என்பதை நானே தீர்மானிப்பேன்.

ஏற்கனவே மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை பூரணமாக நிறைவேற்றுவேன். புதிய அரசியலமைப்பு உருவாகுவதற்கான சந்தர்ப்பம் அதற்கான சாத்தியக் கூறு இருக்கிற வரைக்கும் நான் விலக மாட்டேன். ஆனால் எப்போதாவது இனிமேல் அது நடக்காது என்ற ஒரு தீர்மானம் ஏற்படுமாக இருந்தால் நான் நிச்சயமாக பதவி விலகுவேன்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker