சம்பிக்கவின் சாரதியின் மனைவி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதி, திலும் துசித குமாரவின் மனைவியினால் அடிப்படை மனித உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் உட்பட சிலருக்கு எதிராகவே இன்று (செவ்வாய்க்கிழமை) உயர் நீதிமன்றத்தில் அவரால் அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராஜகிரிய விபத்து தொடர்பாக இன்று நீதிமன்றில் சரணடைந்த குறித்த சாரதி, கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனி டி சில்வா பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து ஜனவரி 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில் உயர் நீதிமன்றில் மனுதாக்கல் செய்துள்ள குறித்த சாரதியின் மனைவி, கடந்த 10 ஆம் திகதி இரவு தமது வீட்டிற்குள் திடீரென நுழைந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தன்னையும் தன்னுடைய 3 மாத குழந்தையையும் கணவரையும் பலவந்தமாக பத்தரமுல்ல பகுதிக்கு அழைத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.
மேலும் எந்த காரணங்களும் இன்றி அதிகாரிகள் தன்னை கைது செய்து இவ்வாறு தடுத்து வைத்திருந்தமையின் ஊடாக அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை ஆவணங்களை பெறவும், தடுப்பில் வைத்திருந்தமை மூலம் தனது உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தும் உத்தரவை பிறப்பிக்கவும் மனுதாரர் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.
குறித்த மனுவில் பிரதிவாதிகளாக பாதுகாப்பு செயலாளர், பதில் பொலிஸ் மா அதிபர், தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர்கள், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் அதன் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 15 பேரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.