அக்கரைப்பற்று , காரைதீவு , கல்முனை பகுதிகளில் 78 ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள் மும்முரம்!

அம்பாறையில் நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்வுகள் விமர்சையாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை (04) நடைபெறவுள்ள 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை அரச திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்களில் கொடிகள் ஏற்றப்பட்டு கொண்டாட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் அடிப்படையில் மருதமுனை, பெரியநீலாவணை, கல்முனை, நற்பிட்டிமுனை, சவளக்கடை, சம்மாந்துறை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், அட்டப்பளம், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய கொடிகள் இவ்வாறு ஏற்றப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் தேசிய கொடி விற்பனை இடம்பெற்று வருவதுடன் ஆர்வத்துடன் பொதுமக்கள் அக்கொடியினை கொள்வனவு செய்து வருகின்றனர்.
பொலிஸ் நிலையங்கள், வங்கிகள், பிரதேச செயலகங்கள், பொது இடங்களில் தேசிய சுதந்திர தின வைபவங்களுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.
சில இடங்களில் வாகன ஊர்வலங்களும் இடம்பெறவுள்ள நிலையில் பொலிஸார் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.



